பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 2:2-10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

2. சுமைசுமக்கிறதற்கு எழுபதினாயிரம்பேரையும், மலையில் மரம் வெட்டுகிறதற்கு எண்பதினாயிரம் பேரையும், இவர்கள்மேல் தலைவராக மூவாயிரத்து அறுநூறுபேரையும் எண்ணி ஏற்படுத்தினான்.

3. தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்தில் ஆள் அனுப்பி: என் தகப்பனாகிய தாவீது தாம் வாசமாயிருக்கும் அரமனையைத் தமக்குக் கட்டும்படிக்கு, நீர் அவருக்குத் தயவுசெய்து, அவருக்குக் கேதுருமரங்களை அனுப்பினதுபோல எனக்கும் தயவு செய்யும்.

4. இதோ, என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம் காட்டுகிறதற்கும், சமுகத்தப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வு நாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்திய காலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்கதகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டைப்பண்ணும்படி நான் எத்தனித்திருக்கிறேன்.

5. எங்கள் தேவன் எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர்; ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதாயிருக்கும்.

6. வானங்களும், வானாதிவானங்களும், அவரைக் கொள்ளக்கூடாதிருக்க அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வல்லவன் யார்? அவர் சந்நிதியில் தூபங்காட்டுகிறதற்கே ஒழிய, வேறே முகாந்தரமாய் அவருக்கு ஆலயம் கட்டுகிறதற்கு நான் எம்மாத்திரம்?

7. இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணரோடு, பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், இரத்தாம்பரநூலிலும், சிவப்பு நூலிலும், இளநீல நூலிலும் வேலைசெய்ய நிபுணனும், கொத்துவேலைசெய்ய அறிந்தவனுமாகிய ஒரு மனுஷனை என்னிடத்தில் அனுப்பும்.

8. லீபனோனிலிருந்து கேதுருமரங்களையும் தேவதாரி விருட்சங்களையும் வாசனை மரங்களையும் எனக்கு அனுப்பும்; லீபனோனின் மரங்களை வெட்ட உம்முடைய வேலைக்காரர் பழகினவர்களென்று அறிவேன்; எனக்கு மரங்களைத் திரளாக ஆயத்தப்படுத்த என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூட இருப்பார்கள்.

9. நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ஆச்சரியப்படத்தக்கதுமாயிருக்கும்.

10. அந்த மரங்களை வெட்டுகிற உம்முடைய வேலைக்காரருக்கு இருபதினாயிரம் மரக்கால் கோதுமை அரிசியையும், இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையையும், இருபதினாயிரம் குடம் திராட்சரசத்தையும், இருபதினாயிரம் குடம் எண்ணெயையும் கொடுப்பேன் என்று சொல்லி அனுப்பினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 2