பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 15:8-19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

8. அப்புறம் எபூசியர் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாய் இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கேயிருக்கிற இராட்சதருடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் சிகரமட்டும் ஏறிப்போய்,

9. அந்த மலையின் சிகரத்திலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,

10. பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,

11. அப்புறம் வடக்கேயிருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாய்ச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக் கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, கடலிலே முடியும்.

12. மேற்புறமான எல்லை, பெரிய சமுத்திரமே; இது யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.

13. எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே, பங்காகக் கொடுத்தான்.

14. அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்திவிட்டு,

15. அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பேர் கீரியாத்செப்பேர்.

16. கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.

17. அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.

18. அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான்.

19. அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 15