பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 34:12-28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

12. அங்கேயிருந்து யோர்தான் பரியந்தமும் போய், உப்புக்கடலில் முடியும்; இந்தச் சுற்றெல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல் என்றார்.

13. அப்பொழுது மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒன்பதரைக் கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டதும், நீங்கள் சீட்டுப்போட்டுச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான தேசம் இதுவே.

14. ரூபன் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும், காத் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும், தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டதும் அல்லாமல், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.

15. இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும் சூரியோதய திசையாகிய கிழக்கே எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இப்புறத்திலே தங்கள் சுகந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள் என்றான்.

16. மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி:

17. உங்களுக்கு தேசத்தைப் பங்கிட்டுக் கொடுக்கும் மனிதரின் நாமங்களாவன: ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவுமே.

18. அன்றியும், தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள்.

19. அந்த மனிதருடைய நாமங்களாவன: யூதா கோத்திரத்துக்கு எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்,

20. சிமியோன் புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய சாமுவேலும்,

21. பென்யமீன் கோத்திரத்துக்குக் கிஸ்லோனின் குமாரனாகிய எலிதாதும்,

22. தாண் புத்திரரின் கோத்திரத்துக்கு யொக்லியின் குமாரனாகிய புக்கி என்னும் பிரபுவும்,

23. யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் கோத்திரத்துக்கு எபோதின் குமாரனாகிய அன்னியேல் என்னும் பிரபுவும்,

24. எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்துக்குச் சிப்தானின் குமாரனாகிய கேமுவேல் என்னும் பிரபுவும்,

25. செபுலோன் புத்திரரின் கோத்திரத்துக்குப் பர்னாகின் குமாரனாகிய எலிசாப்பான் என்னும் பிரபுவும்,

26. இசக்கார் புத்திரரின் கோத்திரத்துக்கு ஆசானின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் பிரபுவும்,

27. ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்குச் சேலோமியின் குமாரனாகிய அகியூத் என்னும் பிரபுவும்,

28. நப்தலி புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய, பெதாக்கேல் என்னும் பிரபுவுமே என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 34